நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை


நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை
x

நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தது.

இந்த நடவடிக்கைக்கு பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கிரிமினல் அவமதிப்பு வழக்கும் மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் மாலை 5.45 மணி அளவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சவுக்கு சங்கர், அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு புதியவர் அல்ல. கடந்த 2016-ம் ஆண்டிலேயே அவர் மீது அவமதிப்பு வழக்கு தாக்கலாகி, நிலுவையில் உள்ளது. ஆனாலும் அவர், மோசமானவராகவும், பொறுப்பற்றவராகவும் தொடர்ந்து வருகிறார்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 19 (1) (ஏ) உறுதி செய்கிறது. ஆனால் இந்த உரிமை முழுமையானது கிடையாது. அரசு மற்றும் நீதித்துறைகளுக்கு விதிவிலக்கு உள்ளது. நீதிபதிகள் மற்றும் நீதித்துறை குறித்து சவுக்கு சங்கர் தொடர்ந்து பல்வேறு அவதூறு கருத்துகளுடன் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மன்னிப்பு கேட்கவில்லை

அவர் தனது செயலுக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை. அவரது பேட்டிகளை நியாயப்படுத்துகிறார். நீதித்துறையையும், நீதிபதிகளின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் குறைக்கும் வகையில் அவரது அறிக்கைகள், கட்டுரைகள், பேட்டிகள் அமைந்துள்ளன. அவர் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது உறுதியாகிறது. தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு இருந்தால் இந்த வழக்கை முடித்து வைத்திருப்போம். ஆனால் அதற்கு முன்வரவில்லை.

6 மாதம் சிறை தண்டனை

எனவே அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கிறோம். அவரை போலீசார் உடனடியாக மதுரை மத்திய சிறையில் அடைக்க வேண்டும். அவரது அவதூறான அறிக்கைகள், பேட்டிகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குவதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜாமீன் தர நீதிபதிகள் மறுப்பு

இந்த உத்தரவை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்குமாறு நீதிபதிகளிடம் சவுக்கு சங்கர் முறையிட்டார். ஆனால், அதை நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து இரவு 7.40 மணியளவில் சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு இரவோடு, இரவாக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.


Next Story