'மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது' - கே.பாலகிருஷ்ணன்


மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது - கே.பாலகிருஷ்ணன்
x

மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து மாநிலத்திடம் தள்ளி விடுவது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த ஒரு பைசா கூட நிதி ஒதுக்க முடியாது என மத்திய மந்திரி கைவிரித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை சிதைத்து, தம்மை தேர்தலில் தோற்கடித்த மக்களை பழிவாங்கும் உள்நோக்கம் கொண்ட இந்த வஞ்சகப் போக்கை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டம் முடிந்து, இரண்டாவது கட்டம் 119 கி.மீ தொலைவிற்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்று பணிகள் ஒரு பகுதி முடிந்துள்ளன. இதுவரை ரூ.21 ஆயிரம் கோடிகள் செலவாகியுள்ளன. அதே சமயம், இந்த பணிகளுக்காக, மத்திய அரசு தனது பங்கினை விடுவிக்கவில்லை என்பதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பலமுறை சுட்டிக்காட்டினார், கடிதங்களும் எழுதினார். தேர்தல் களத்திலும் கூட இந்த கேள்வி எதிரொலித்தது, அப்போதெல்லாம் மவுனம் சாதித்த மத்திய அரசு, இப்போது நாடாளுமன்றத்தில் கூறிய பதிலில், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்காது என கூறியதுடன், மாநில அரசே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு, மத்திய மந்திரி தொகன் சாகு கொடுத்திருக்கும் பதிலில், மற்ற பல மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் நகரத்தில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டு கட்டங்களுக்கு ரூ.6400 கோடிகளுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சூரத் மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு 3 ஆண்டுகளில் ரூ.4,700 கோடிகள் கொடுத்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் 4 மெட்ரோ ரெயில் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு ரூ.8,000 கோடிகள் தரப்பட்டுள்ளன.

ஏற்கனவே டெல்லியில் இயங்கிவரும் மெட்ரோ ரெயில் கட்டுமானத்திற்கு ரூ.11,000 கோடி, பெங்களூருவில் செயல்படும் திட்டத்திற்கு ரூ.16,000 கோடி, மும்பை நகரத்தின் மூன்றாவது கட்ட மெட்ரோவிற்கு மட்டுமே ரூ.12,500 கோடி என மத்திய அரசின் நிதி கொடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒரு பைசா கூட நிதி தர முடியாது என்பது வஞ்சகமே ஆகும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு பின் அனுமதி பெற்ற சூரத் மற்றும் ஆக்ரா திட்டங்களுக்கு ஓராண்டில் ரூ.2,264 கோடிகளை ஒதுக்க முடிந்த மோடி ஆட்சியால், தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிப்பது ஏற்க முடியாததாகும்.

ரூ. 63,246 கோடிகள் மதிப்பிலான மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்றும் மொத்த சுமையும் மாநில ஆட்சியின் மீதே சுமத்தப்படுவது அநீதி. கூட்டாட்சிக் கோட்பாட்டை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கை.

மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த சென்னையில் ஏற்கனவே தொடங்கி ஒரு பகுதி முடிந்திருக்கும் மெட்ரோ திட்டம், நிதிச் சுமையால் தாமதமானால் அதனால் ஏற்படும் அசவுகரியங்கள் மக்களை, போக்குவரத்தை, தொழில்களை மிகக் கடுமையாக பாதிக்கும். இதைத்தான் மத்திய ஆட்சி எதிர்பார்க்கிறதா?

மெட்ரோ ரெயில் திட்டத்தின் மொத்த சுமையையும் ஏற்பதால் மாநில அரசே அதற்காக கடன்களை பெற்று வட்டியையும் சுமக்க நேரிடும், கடனும் வட்டியும் மிக அதிகமானால் பட்ஜெட்டின் மற்ற திட்டங்கள் பாதிக்கப்படும்? அதைத்தான் மத்திய ஆட்சி விரும்புகிறதா?

ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்காக எடுக்கப்பட்ட நிலத்தில் வெற்றுச் செங்கல் நின்றுகொண்டு பல்லைக் காட்டுகிறது. இப்போது மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கும் நிதியை மறுத்து மாநிலத்திடம் தள்ளி விடுவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்தப் போக்கினை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த அநீதியை தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்துவதுடன், இந்த போக்கிற்கு எதிரான சாத்தியமான அனைத்து வழிகளிலும் போராடிட ஜனநாயக சக்திகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது."

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story