கோவில்களில் செல்போன்களுக்கு தடை


கோவில்களில் செல்போன்களுக்கு தடை
x

திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை. செல்போன்களை டிக்கெட் வாங்கிக்கொண்டு லாக்கர்களின் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

அரியலூர்

செல்போன்களுக்கு தடை

அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது. திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

''சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையை பிறப்பித்தார்கள்.

ஆதங்கம்

நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.

* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.

* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.

* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.

இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள்

திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.

ஆவல் அதிகரிப்பு

பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பெரம்பலூர், அரியலூரை சேர்ந்த பொதுமக்கள் குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.

பக்தர்களுக்கு இடையூறு

அரியலூர் நகரை சேர்ந்த அமுதன்:- திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்கள், பக்தர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே ராமேஸ்வரம் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவு பக்தர்கள் மனம் உருகி இறைவனை வழிபட வழிவகை செய்யும். கோவிலில் உற்சவர் சன்னதியிலேயே இப்போது பலர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து அதை தங்களது உறவினர்களுக்கு காட்டி வருகின்றனர். வரிசையில் நின்று காத்திருக்கும் போது பலர் போனில் பேசுவது மற்றவர்களுக்கு இடையூறாக உள்ளது. இதுதவிர பெரிய கோவிலில் சுற்றுப்புற பிரகாரங்களில் பலர் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுப்பதும், சினிமா பாடல்கள் கேட்பதும் என ஆகம விதிமுறைகளுக்கு மீறி செயல்படுகின்றனர். எனவே இந்த நடைமுறையை தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்தினால் அது கோடான கோடி பக்தர்களுக்கு நன்மையாக இருக்கும்.

சிலைகள் சேதம்

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த விவசாயி மணிவண்ணன்:- கங்கைகொண்ட சோழபுரம் போன்ற புராதான சின்னங்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை. இதன் கலை நுட்பம் பார்த்து ரசிக்கப்பட வேண்டியவை. சில நபர்கள் புகைப்படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் சிற்பங்களின் மீது கை வைத்து அசுத்தப்படுத்துவது, சேதப்படுத்துவது, அதன் மதிப்பை குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் கோவிலுக்கு வருபவர்கள் கல்லூரி மாணவ-மாணவிகள் தான் அதிகமாக வருகின்றனர். இங்கு வந்து செல்பி என்ற பெயரில் கோவில் என்று பாராமல் போட்டோ எடுத்து செல்கின்றனர். எனவே அரசு புரதான அல்லது பிரசித்தி பெற்ற கோவில்களில் செல்போன்களை பயன்படுத்த தடை விதித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

தடை செய்யக்கூடாது

மீன்சுருட்டியை சேர்ந்த வடிவுக்கரசி:- கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். செல்போன்கள் மூலம் தங்கள் நினைவுகளை பதிவு செய்து கொள்வதற்காக படம் எடுத்துக் கொள்வது அவர்களது மகிழ்ச்சியை இன்னும் கூட்டுவதாக அமையும். எனவே இது போன்ற பிரசித்தி பெற்ற இடங்களில் செல்போன்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது போன்ற சுற்றுலா தலங்களில் செல்போனில் படம் பிடித்து மகிழ்வது மிகவும் அலாதியானது. இதனை தடை செய்யக்கூடாது.

ஆசியாவிலேயே உயரமான யானை சிற்பம்

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த லட்சுமி:- இந்த கிராமத்தின் ஊர் எல்லையில் காவல் தெய்வமாக துறவு மேல் அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக முகப்பு தோற்றத்தில் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் சுமார் 41 அடி நீளம் 12 அடி அகலம் கொண்ட 80 அடி உயரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யானை சுதை சிற்பம் நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தரும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்த சிற்பம் ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிலை என்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த கோவிலை சுற்றி பல்வேறு சிற்பங்கள் தொழில்நுட்பத்துடனும், கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

செல்போன் தடை செய்ய அவசியம் இல்லை

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த அருளப்பன்:- மீன்சுருட்டி அருகே உள்ள அழகர் கோவிலில் உள்ள யானை சிற்பம் அருகில் நின்று படம் எடுத்துக் கொள்ள பெரியவர்கள் வரை சிறியவர்கள் வரை அனைத்து சுற்றுலா பயணிகளும் விரும்புவார்கள். கிராமப்புறத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் அமைந்துள்ளது. இங்கு செல்போன் பயன்படுத்துவதால் யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படப்போவதில்லை. எனவே இங்கு செல்போன் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story