தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அவசர கால சிகிச்சை மையங்களை மூட முடிவா?-முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம்


தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அவசர கால சிகிச்சை மையங்களை மூட முடிவா?-முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம்
x

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அவசர கால சிகிச்சை மையங்களை மூடுவதற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த புதுக்கோட்டையை சேர்ந்த பி.யு.சின்னப்பாவின் 106-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை சின்னப்பா நகரில் உள்ள அவரது நினைவிடத்தில் ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுக்கோட்டையில் பிறந்த பி.யு. சின்னப்பாவிற்கு நினைவு மணிமண்டபம் கட்ட வேண்டும். அரசு விழா நடத்த வேண்டும் என சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் இது பற்றி தெரியவரும். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகளை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குளோபல் டெண்டர் விடப்பட்டு மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னையில் விபத்து நடந்தால் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து சேர்வதற்கு ரெஸ்பான்ஸ் டைம் என்பது 8 நிமிடமாக இருந்தது. தற்போது அதையொட்டி ரெஸ்பான்ஸ் டைம் வந்தாலும், இதனை இன்னும் குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் விபத்து அதிகம் நடக்கக்கூடிய சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து அவசர கால சிகிச்சை மையங்கள் கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. அதனை தற்போது மூடப்படுவதாக தகவல்கள் வருகிறது. இதற்கு அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதனை மூடினால் அ.தி.மு.க. சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்படும். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உதவித்தொகை ஆகியவை காலதாமதமாக வழங்கப்பட்டு வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story