ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல்; இன்று மனுக்கள் மீது பரிசீலனை


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல்; இன்று மனுக்கள் மீது பரிசீலனை
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

ஈரோடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல்; இன்று மனுக்கள் மீது பரிசீலனைஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுதாக்கல் முடிவடைந்தது. இதுவரை 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 37 பேர் மனு அளித்தனர்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.

அன்று முதல் தினமும் பலர் வந்து ஆர்வமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். குறிப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய் நாணயங்களுடன் வந்து பலர் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.

கடந்த 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் வரை 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

டோக்கன்

இந்தநிலையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஏராளமானவர்கள் வந்திருந்தனர். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

பகல் 11 மணியில் இருந்தே ஏராளமானவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர். அவர்களை ஒவ்வொருவராக உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர்.

மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஆனால் அதற்குள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்தார்கள். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் வரிசையாக வேட்பு மனுக்களை அதிகாரிகள் பெற்றனர். 3 மணிக்கு பிறகு 26 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.

வாபஸ்

தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளார்கள்.

அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் செந்தில் முருகனும், அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாத்தும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று அந்தந்த கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. எனவே அவர்கள் 2 பேரும் வேட்புமனுக்களை வாபஸ் பெற உள்ளனர்.

96 பேர் மனு தாக்கல்

நேற்று ஒரே நாளில் மொத்தம் 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். எனவே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை மொத்தம் 96 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.



Next Story