அரியலூரில் கிராம ஊராட்சி தலைவர், 5 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடக்கிறது


அரியலூரில் கிராம ஊராட்சி தலைவர், 5 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடக்கிறது
x

அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி தலைவர், 5 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

அரியலூர்

போட்டியின்றி தேர்வு

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் நாளை (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதில் அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியம், கீழக்காவாட்டாங்குறிச்சி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தமிழ்ச்செல்வியும், செந்துறை ஒன்றியம், நாகல்குழி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஷ்ணு பிரியாவும், துளார் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ராமச்சந்திரனும், ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மலர்கொடியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறாது.

பிரசாரம் நிறைவு

அரியலூர் மாவட்டத்தில் ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆண்டிமடம் ஒன்றியம், இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் போட்டியிடுகின்றனர். நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பதால் அந்தப்பகுதிகளில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

வாக்குச்சாவடி மையங்கள்

அரியலூர் மாவட்டத்தில் ரெட்டிபாளையம் கிராம ஊராட்சிக்கு வாக்களிக்க 6 வாக்குச்சாவடிகளும், மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டுக்கும், இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டுக்கும், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டுக்கும், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டுக்கும், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டுக்கும் வாக்களிக்க தலா ஒரு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்காளர்களுக்கு பூத் சீலிப் அரசு அலுவலர்களால் வழங்கப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்குப்பதிவு பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றை அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் கொண்டு செல்கின்றனர். முன்னதாக வாக்கு பெட்டிகளையும், வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களையும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

தேர்தல் பணியில் 44 அரசு அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 210 போலீசாரும் ஈடுபடவுள்ளனர். முன்னதாக இடைத்தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களையும், வாக்கு எண்ணும் மையங்களையும் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாலமுரளி, தேர்தல் பிரிவு அலுவலர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் தென்கச்சிபெருமாள்நத்தம் வாக்குச்சாவடி மற்றும் சாத்தம்பாடி வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அதிகாரி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான செந்தில்குமாரிடம் கேட்டறிந்தார்.

15-ந்தேதி பதவி ஏற்பு

வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் ரெட்டிபாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் 3,058 வாக்காளர்களும், 5 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலில் 1,773 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வருகிற 12-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெறுபவர்களும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் 15-ந்தேதி பதவி ஏற்க உள்ளனர்.


Next Story