ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருட்டு


ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருட்டு
x

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் தந்தை பெரியார் நகர் கிருஷ்ணா சதுக்கம் பகுதியில் வசித்து வருபவர் தீவனூரான் (வயது 65), அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியரான இவர் கடந்த 2-ந்தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தார்.இந்நிலையில் நேற்று காலை இவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து திடுக்கிட்டனர். உடனே இதுகுறித்து அவர்கள், தீவனூரானுக்கு தகவல் தெரிவித்தனர்.

நகை- பணம் திருட்டு

அதன்பேரில் அவர், சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வந்தார். அவர் தனது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 3½ பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளிப்பொருட்கள் ஆகியவை திருட்டுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகை, பூஜை பொருட்கள், பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரமாகும்.

இதுகுறித்து தீவனூரான், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story