மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

கீழாநிலைக்கோட்டை அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி பந்தயம்

அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே மாவடிபட்டி கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நேற்று முன்தினம் முடிந்தது. விழாவை முன்னிட்டு மாவடிபட்டி கிராமத்தார்கள் சார்பில், மாட்டுவண்டி எல்கை பந்தயம் மாட்டின் பல் அடிப்படையில் நேற்று நடைபெற்றது.

பந்தயத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள், மாட்டு வண்டிகளுடன் வந்திருந்தனர். முதலாவதாக நான்கு பல் கொண்ட மாடுகளுக்கு பந்தயம் நடத்தப்பட்டது. பந்தய தூரம் போய் வர 4 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவாக பிரித்து நடத்தப்பட்டது. பந்தயமானது மாவடிபட்டி- கல்லூர் சாலையில் நடைபெற்றது.

பரிசு

இதில் முதல் பரிசு தேனி மாவட்டம் வெண்டி முத்தையா, வலையன்வயல் அறிவு, 2-ம் பரிசு அழகியநாயகிபுரம் ஜே.பி., தேனி தேவராஜ்நகர் தமிழ்செல்வி ராஜா, 3-ம் பரிசு கே.புதுப்பட்டி கே.எ.அம்பாள், பேராவூரணி அக்னி காளியம்மாள், 4-ம் பரிசு பள்ளத்தூர் ஹரிகிருஷ்ணன், தேனி என்.டி. பட்டி தவப்புதல்வன் ஆகியோர் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற இரண்டு பல் கொண்ட மாடுகளுக்கான பந்தயத்தில் பந்தய தூரம் 3 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 12 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு தேனி மொக்க பாண்டி, 2-ம் பரிசு வலையன்வயல் அறிவு, 3-ம் பரிசு மாவடிபட்டி கூடையப்ப கருப்பன், 4-ம் பரிசு திருவாப்பாடி புல்லட் ராவுத்தர் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட இளம் காளை கன்றுகள் குதிரையை போல் சீறிப்பாய்ந்து ஓடியதை அப்பகுதியில் இருந்த மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.


Next Story