வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை


வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை
x

கரூர் அருகே வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

நகைகள் கொள்ளை

கரூர் அருகே உள்ள புலியூர் கணேசாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் புலியூரில் சொந்தமாக வாட்ச் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ரமேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் புலியூருக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார்.

அப்போது வீட்டினுள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், மூக்குத்தி, வளையம், ஆரம் உள்பட 6 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து ரமேஷ் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story