பள்ளிகளில் காலை உணவு திட்டம் - தமிழக அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு


பள்ளிகளில் காலை உணவு திட்டம் - தமிழக அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு
x

பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

சென்னை,

அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குவதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்.எம்.சி.) உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் இந்த பணியை சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும். சுத்தமான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வது அவசியம்.

காய்கறிகள், உணவுப் பொருட்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பார்வையிட்டு தரம், சுவையை பரிசோதிக்க வேண்டும். மாணவர்கள் தட்டு மற்றும் கைகளை தூய்மையாக கழுவுவதை கண்காணிக்க வேண்டும்.

காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு வழங்கும்போது உணவு பரிமாறுவதற்கு எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உதவி செய்யலாம்.

மேலும் சுகாதார குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறப்பான முறையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை தலைமை ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story