திருமணமான பெண்ணை காரில் கடத்தி சென்ற காதலன்


திருமணமான பெண்ணை காரில் கடத்தி சென்ற காதலன்
x

கிருஷ்ணராயபுரம் அருகே சினிமா பாணியில் திருமணமான பெண்ணை காரில் கடத்தி சென்ற காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

பெண்ணிற்கு திருமணம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவரது மனைவி புஷ்பா. இவர்களது மகள் சினேகா (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சினோகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் சிேனகாவிற்கும், தேவச்சி கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த புஷ்பாவின் தம்பி பழனிச்சாமி மகன் சூர்யாவிற்கும் (21) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 27-ந்தேதி சினேகாவிற்கும், சூர்யாவிற்கும் பழனியில் வைத்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

காரில் கடத்தல்

இந்தநிலையில் சூர்யாவும், சினேகாவும் தேவச்சி கவுண்டன்புதூரில் குடும்பம் நடத்தி வந்தனர். சினேகாவிற்கு திருமணமான தகவல் கார்த்திக்குக்கு நேற்று முன்தினம் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் ஒரு காரில் தனது அண்ணன் சக்திவேல் (23) என்பவரை அழைத்து கொண்டு தேவச்சிகவுண்டன் புதூருக்கு வந்தார். பின்னர் பழனிச்சாமி வீட்டில் பிரச்சினை செய்து சினேகாவை அங்கிருந்து காரில் கடத்தி சென்று விட்டார்.

படுகாயம்

முன்னதாக இதனை தடுக்க முயன்ற பழனிச்சாமி மற்றும் புஷ்பாவை கார்த்திக், சக்திவேல் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடி கார்த்திக், சக்திவேல் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story