வீடூர் அணையில் மூழ்கிய ஊழியரின் உடல் மீட்பு


வீடூர் அணையில் மூழ்கிய ஊழியரின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 7:12 AM GMT)

வீடூர் அணையில் மூழ்கிய ஊழியரின் உடல் மீட்கப்பட்டது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

புதுச்சேரி மாநிலம் திருபுவனை புதுகாலனியை சேர்ந்தவர் சுதாகர்(வயது 43). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 19-ந் தேதி தனது நண்பர்கள் 6 பேருடன் வீடூர் அணைக்கு வந்தார். அங்கு மது அருந்தி விட்டு அனைவரும் அணையில் குளித்தனர். அப்போது சுதாகர், நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய சுதாகரை தேடினர். அதற்குள் இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் மீண்டும் வீடூர் அணையில் சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சுதாகர் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story