பா.ஜ.க. மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு


பா.ஜ.க. மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:47 PM GMT)

பா.ஜ.க. மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் சில தினங்களுக்கு முன்பு இநது முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது நகரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விநாயகர் சிலைகள் டி.டி. நகருக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. அங்கு இந்து முன்னணியின் மாவட்ட பொது செயலாளர் அக்னி பாலா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன் மத கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பிற மதத்தினர் மனம் புண்படும் வகையிலும், அரசியல் கட்சித்தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையிலும், அவர்களின் சிலைகளை அகற்றுவோம் என்றும் பேசினார் என காரைக்குடி நகர தி.மு.க. செயலாளரும், காரைக்குடி நகர் மன்ற துணை தலைவருமான குணசேகரன் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன் மற்றும் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே மாவட்ட பா.ஜ.க. தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் ஏராளமான பா.ஜ.க.வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். அவர்களிடம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. மேலும் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தை சந்தித்து பேசுவதாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story