நிலப்பிரச்சினையில் இருதரப்பினர் மோதல்; 15 பேர் காயம்


நிலப்பிரச்சினையில் இருதரப்பினர் மோதல்; 15 பேர் காயம்
x
தினத்தந்தி 9 July 2023 8:29 PM GMT (Updated: 10 July 2023 12:08 PM GMT)

நிலப்பிரச்சினையில் இருதரப்பினர் மோதலில் 15 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

தொட்டியம்:

மோதல்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள வெங்காயப்பட்டியை சேர்ந்த முத்துசாமியின் மகன் ரவி(வயது 34). இவருக்கும், இவரது அண்ணன் பெரியண்ணன் குடும்பத்திற்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் ரவி, அவரது மனைவி மோகனா(வயது 28) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கும், அங்கு வந்த பெரியண்ணனின் மனைவி மகாலட்சுமிக்கும்(39) இடையே நிலம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அரிவாள் உள்ளிட்டவற்றால் இருதரப்பினரும் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.

15 பேர் மீது வழக்கு

இதில் இரு தரப்பை சேர்ந்த மொத்தம் 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ்(40), பழனியம்மாள்(35), சக்திவேல்(20), மகாலட்சுமி, பார்த்தசாரதி(21), பார்த்திபன்(22), நவீன்(16) ஆகிய 7 பேர் மீதும், இதேபோல் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் ரவி, மோகனா, பாக்கியம்(50), ஆறுமுகம்(60), தனம்(55), ஜெகதாம்பாள்(40), முத்துக் கருப்பன்(50) உள்பட 8 பேர் மீதும் தொட்டியம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story