மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 21 Jun 2023 7:40 AM GMT (Updated: 21 Jun 2023 8:24 AM GMT)

மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

முத்தமிழறிஞர் பிறந்த திருக்குவளையும் அவர் வளர்ந்த திருவாரூரும் உடன்பிறப்புகளுக்குத் திருத்தலங்கள். அங்கே செல்வது என்றால் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் உற்சாகமும் புத்துணர்வும் ஏற்படும். உங்களில் ஒருவனான எனக்கும் அதே உணர்வுதான் எப்போதும் இருக்கும். நேற்று அந்த உணர்வு சற்று மிகுதியாகவே இருந்தது! ஆரூரின் ஆழித்தேர் வடிவில் திருவாரூர் காட்டூரில் எழிலார்ந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைத்தபோது, என் நெஞ்சில் எத்தனையோ எண்ண அலைகள்! விழாப் பந்தல் நிரம்பி வழியும் அளவுக்குத் திரண்டிருந்த உடன்பிறப்புகளின் நெஞ்சங்களிலும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரைப் பற்றிய எண்ணங்களே மிகுந்திருந்ததை அறிவேன்.

கலைஞர் கோட்டத்தைத் திறக்கின்ற பெரும் வாய்ப்பு எனக்கு வாய்த்த நிலையில், கோட்டத்தினைப் பார்வையிட்ட சிறப்பு விருந்தினர்கள், கழக நிர்வாகிகள் எல்லாரும் கண்கள் விரிந்திட, கலைஞரின் பேராற்றலைக் கண்டு வியந்தனர். 'சாதாரண மனிதர்களிடமிருந்துதான் ஒரு சகாப்தத்தின் விடிவுக்கான ஒளி கிளம்புகிறது' என்கிற தலைவர் கலைஞரின் பொன்மொழியே அவரது வாழ்க்கையாகவும் அவரது நூற்றாண்டு செய்தியாகவும் அமைந்திருப்பதை அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்கள் - ஆவணங்கள் வாயிலாக அறிகின்ற யார்தான் ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்? தன் வாழ்வின் நிகழ்வுகளையும், அதன் வழியே தமிழ்நாடு - இந்திய அரசியல் செய்திகளையும் நெஞ்சுக்கு நீதியாக எழுதி ஆவணப்படுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

எழுத்தின் எல்லாப் பரிமாணங்களிலும் தன் படைப்புகளை வெற்றிகரமாக வழங்கியவர். அவருடைய நூல்களைக் கொண்டே ஒரு நூலகம் அமைக்க முடியும். கோட்டத்தில் தலைவர் கலைஞரின் தந்தை முத்துவேலர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் திறந்து வைத்தார். அது நூலகமாக மட்டுமில்லாமல், முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கைக்கான ஆவணக் காப்பகமாகவும் திகழும். எதிர்காலத் தலைமுறையினருக்கு, இரு நூற்றாண்டை ஆண்ட தலைவரின் பெருமையைச் சொல்லும்.

காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு செயல்பட்டவர் கலைஞர். நாடகம் முதல் ஊடகம் வரை அவரது படைப்புகள் தொடர்ந்தன. கலைஞரை நேரில் பார்க்க வாய்ப்பில்லாத தலைமுறையினர், இந்தக் கோட்டத்திற்கு வந்து அவரது வாழ்க்கை வரலாற்றை, சளைக்காத போராட்டத்தை, தொலைநோக்குத் திட்டங்களை, நிகரற்ற படைப்பாற்றலைத் தெரிந்து கொள்ளும்போது, இப்படிப்பட்ட அற்புதத் தலைவரைப் பார்க்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்தைத் தணிக்கும் வாய்ப்பு இது.

பள்ளி - கல்லூரி மாணவச் செல்வங்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் திருவாரூர் திருத்தலத்தில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும். நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் 80 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வை அறிந்திட வேண்டும். முத்தமிழறிஞர் பிறந்து - வளர்ந்த காலத்தில் திருவாரூர் எப்படி இருந்தது, இன்று அந்த நகரம் மாவட்டத் தலைநகராக்கப்பட்டு, மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டதாக வளர்ச்சியடைந்திருப்பதற்கு காரணம் தலைவர் கலைஞர்தான் என்பதை கோட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள முடியும். கழக உடன்பிறப்புகள் தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது மட்டுமல்ல, நேரத்தை ஒதுக்கி ஒரு முறையேனும் கலைஞர் கோட்டத்தைக் காண வேண்டும். கோட்டத்தைக் காணும்போது உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உத்வேகம் பிறக்கும்.

அந்த உத்வேகத்தைக் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நாளில் நானும் பெற்றேன். கோட்டத்தில் உள்ள திருமண அரங்கில் நான்கு இணையர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தை எளிய முறையில் நடத்தி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா கொள்கைகளுக்கு வலிமை சேர்த்தோம். கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர் திருத்தலத்தின் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாடலிபுத்திரம் என வரலாற்றில் பெயர் பெற்ற பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன்.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நான் உரையாற்றியது போல, இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும். அதற்கான முன்னெடுப்பை பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் மேற்கொண்டிருக்கிறார்.

ஜூன் 23-ஆம் நாள் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை - ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது. கலைஞருக்குக் கோட்டம் கண்டோம். அவர் வழியில் ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story