பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவிப்பு - தமிழ்நாடு அரசு


பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவிப்பு - தமிழ்நாடு அரசு
x

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதி இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மகாகவி பாரதியார் தமிழ்ப்பற்று, தெய்வப்பற்று, தேசப்பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல். சமூக, பொருளாதார உரிமைகளுக்காக எழுதிய, தனது கவிதை வரிகளால் மக்கள் மனதில் என்றும் நிலைத்துள்ளார்.

மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அவற்றில், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11 (நாளை), "மகாகவி நாள்"-ஆக கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும்.

எனவே, சிறப்பு வாய்ந்த மகாகவி நாளான நாளை காலை 9.30 மணிக்கு காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து, மகாகவி பாரதியாரின் உருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story