உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்


உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
x

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நல அமைப்பின் சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் செவிலியர் கல்லூரியை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், அண்ணாசிலை வழியாக சென்று மீண்டும் பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது. முன்னதாக கலெக்டர் தலைமையில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளிடையே நடத்தப்பட்ட மக்கள் தொகை பெருக்கமும், குடும்ப நலத்திட்டமும் குறித்த பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட குடும்ப நலத்துறையில் மாசற்ற பணிபுரிந்தமைக்காக 20 வருடங்கள் விபத்தின்றி வாகனங்கள் இயக்கியமைக்காக தமிழக அரசால் ஊர்தி டிரைவர்கள் செந்தில்குமார், சிங்காரவேலு ஆகியோருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் இணை இயக்குனர் (பொறுப்பு மருத்துவம்- குடும்ப நலம்) டாக்டர் ரவி, மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ராஜ்மோகன், துணை இயக்குனர்கள் டாக்டர் கோமதி (மருத்துவம்-குடும்ப நலம்), டாக்டர் ராம்கணேஷ் (புதுக்கோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story