பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு விருது- 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு விருது- 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:46 PM GMT)

பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாவட்ட அளவிலான விருதுகள் பெற வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாவட்ட அளவிலான விருதுகள் பெற வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விருதுகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. சொந்த மற்றும் குத்தகை நிலங்களில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள், அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை அங்கக முறையில் மீட்டெடுத்தல், பாரம்பரிய காய்கறி விதைகளை பிற விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தல், முறையான நீர் மற்றும் மண்வள மேம்பாடு ஆகிய காரணிகள் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் விருதிற்கு தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பங்களை www.tnhorticulture.tn.gov.in என்கிற இணையத்தளத்திலும் அல்லது சிவகங்கை மாவட்டத்தின் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 26-ந் தேதிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story