ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலருக்கு யுனெஸ்கோ விருது


ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலருக்கு யுனெஸ்கோ விருது
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 7 Jun 2023 10:16 AM GMT)

ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக காப்பகத்தின் இயக்குனருமான ஜகதீஷ்பகன், யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளக காப்பக மேலாண்மைக்கான 'மைக்கேல் படிசே' விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.

விருதுக்கு தேர்வு பெற்றது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜகதீஷ் பகன் கூறியதாவது:-

யுனெஸ்கோ அமைப்பால் சர்வதேச அளவில் வழங்கப்படும் இந்த விருது முதல் முறையாக இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது. அதிலும் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்திற்கு கிடைத்துள்ளது மிகவும் பெருமைக்கு உரியது. மன்னார் வளைகுடாவில் உயிரினங்களை பாதுகாக்க சமுதாய மேம்பாட்டிற்காக, இயற்கை சுற்றுலாவை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

ஒரு நாட்டிற்கு ஒரு விருது

சமுதாய மேம்பாட்டிற்காக பெண்களுக்கு பயிற்சி அளித்தோம். சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் தடுப்பு செக் போஸ்டுகளை அமைத்து கடலோரங்களில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடுத்தோம். மேலும் மன்னார் வளைகுடாவில் வசிக்கும் அரிய உயிரினங்களான கடல்பசு, டால்பின்களை பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

பல்லுயிர் பெருக்கத்திற்காக மாங்குரோவ் காடுகள் நட்டு வளர்க்கப்பட்டது. ஏராளமான விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. கடல் ஆமைகள் குஞ்சு பொரிக்க காப்பகங்கள் அமைத்து ஆமை இனம் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஆராய்ந்து இந்த விருதை வழங்கி உள்ளனர். சர்வதேச அளவில் ஒரு நாட்டிற்கு ஒரு விருதுதான் வழங்கப்படும். அந்த வகையில் இந்தியாவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story