சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது


சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 6:45 PM GMT)

சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மணிமேகலை விருது

தமிழக அரசின் உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட மேலாண்மை அலகின் கீழ், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம அளவிலான சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.

இந்த சுயஉதவிக்குழுக்கள் ஏ அல்லது பி தர மதிப்பீடு உடையதாக இருக்க வேண்டும். சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 முறை வங்கி கடனை பெற்று முறையாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 நிர்வாகிகள் சுழற்சி முறையில் மாற்றம் செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள்

ஊராட்சி அளவிலான மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு ஏற்படுத்தி குறைந்தபட்சம் ஓர் ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். நகர்புறங்களில் உள்ள பகுதி அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளில் 20 கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும்.

நகர அளவிலான கூட்டமைப்பு தொடங்்கப்பட்டு குறைந்தபட்சம் ஓர் ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் 10 கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான விருது பெற மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள தகுதியான சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாளர்களிடமும், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களிடமும் 25-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story