கோவில் கட்டும் பணியில் இருதரப்பு தகராறு:போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சிதாரமங்கலத்தில் பரபரப்பு


கோவில் கட்டும் பணியில் இருதரப்பு தகராறு:போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சிதாரமங்கலத்தில் பரபரப்பு
x

தாரமங்கலம் அருகே கோவில் கட்டும் பணியில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்

தாரமங்கலம்

தாரமங்கலம் அருகே கோவில் கட்டும் பணியில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவில் கட்டும் பணி

தாரமங்கலம் அருகே உள்ள பரியம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45), விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து புதிதாக கூலமுனியப்பன் கோவில் கட்டினார். இந்த கோவிலுக்கு நேற்று ேமற்கூரை அமைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது கோவிலுக்கு சென்ற ரமேஷ் சாமியை மறைக்காதவாறு மேற்கூரை அமைக்கும் பணியை மேற்கொள்ளும்படி கூறியுள்ளார். இதுதொடர்பாக கோவிந்தசாமி என்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், ரமேஷ் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ரமேசை அவர்கள் தாக்கி கொடுவாளால் தலையில் கீறி ரத்தக்காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீக்குளிக்க முயற்சி

இந்த சம்பவம் குறித்து ரமேஷ் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் ஏட்டு முருகன் (45), சதீஷ் (30), சூர்யா (22), கோவிந்தசாமி (70) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு ரமேசின் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் ரமேசை தாக்கிய போலீஸ் ஏட்டு முருகன் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது ரமேஷின் மனைவி தைலம்மாள் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் தைலம்மாளின் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.


Next Story