ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம்


ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 9:02 AM GMT)

திருவாரூர் அருகே காட்டூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் நாளை திறந்து வைக்கிறாா்.

திருவாரூர்

ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம்

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு உள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் நினைவு நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன.

கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. விழாவில் கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டு அரங்கம் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன.

கவியரங்கம், பட்டிமன்றம்

நாளை காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து கவியரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசிக்கிறார்கள்.

பின்னர் மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. சாலமன் பாப்பையா நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்துகிறார். இதில் பேச்சே என்ற தலைப்பில் திருவாரூர் சண்முகவடிவேல், கவிதாஜவகர், ராஜா ஆகியோரும், எழுத்தே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோரும் பேசுகிறார்கள்.

கலைஞர் உருவச்சிலை திறப்பு

மாலை 3.30 மணிக்கு மாலதி லஷ்மன் குழுவினரின் பாட்டரங்கம் நடைபெறுகிறது. தொடர்ந்து கலைஞர் கோட்ட திறப்பு விழா நடைபெற உள்ளது.

தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் வரவேற்று பேசுகிறாா். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

பீகார் முதல்- மந்திரி

பீகார் முதல்- மந்திரி நிதீஷ்குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து பேசுகிறார். பீகார் துணை முதல்- மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேல் நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நேற்று இந்த விழா ஏற்பாடுகளை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது தாட்கோ தலைவர் மதிவாணன், தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ஆய்வு

இன்று(திங்கட்கிழமை) காலை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்ட திறப்பு விழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிடுகிறார். மீண்டும் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்கும் அவர் நாளை நடக்கும் விழாவில் பங்கேற்கிறார்.

விழா நிறைவு பெற்ற பின் நாளை இரவு மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் மூலம் சென்னை செல்கிறார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்க நாளை(செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் பீகார் முதல்- மந்திரி நிதீஷ்குமார், துணை முதல்- மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் திருச்சி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகின்றனர்.

பாதுகாப்பு பணிகள்

ஹெலிகாப்டர் இறங்கி ஏறுவதற்கு வசதியாக திருவாரூர் வா.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. விழா நிறைவு பெற்ற உடன் பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்- மந்திரி தேஜஸ்வியாதவ் ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் பீகார் செல்கின்றனர். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முடிவில் தயாளு அம்மாள் அறக்கட்டளை அறங்காவலர் சம்பத்குமார் நன்றி கூறுகிறார்.

----

டிேரான்கள் பறக்க தடை(பாக்ஸ்)

திருவாரூரை அடுத்த காட்டூரில் நாளை கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்கும் டிேரான்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.


Next Story