ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலுவிற்கு பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி மனு


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலுவிற்கு பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி மனு
x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கைதான 11 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் ஒருவரான திருவேங்கடம் நேற்று காலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைக்காக மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்து சென்றபோது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதற்கு போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் திருவேங்கடம் சம்பவ இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவுடி பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது மனைவி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


Next Story