சென்னை பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு: கொலையாளிகள் 4 பேர் அதிரடி கைது


சென்னை பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு: கொலையாளிகள் 4 பேர் அதிரடி கைது
x

சென்னை பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்ட கொலையாளிகள் 4 பேரை சேலம் அருகே தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சேலம்

சேலம்:

சென்னை பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்ட கொலையாளிகள் 4 பேரை சேலம் அருகே தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பா.ஜனதா பிரமுகர்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 30). இவர், மத்திய ெசன்னை பா.ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவராக இருந்தார். பாலச்சந்தருக்கு கொலை மிரட்டல் இருந்து வந்துள்ளது. எனவே அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இவர் கடந்த 24-ந் தேதி இரவு 8 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே உள்ள டீ கடைக்கு சென்றிருந்தார். அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் வந்தபோது, அவர் இந்த நேரத்தில் வர வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

வெட்டிக்கொலை

இதனிடையே டீ கடைக்கு சென்ற பாலச்சந்தரை 4 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் திடீரென்று சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கொலையாளிகள் சேலம் மாவட்டம் தேவூர் அருகே குஞ்சாம்பாளையம் பகுதியில் குட்டி என்கிற பழனிசாமி (45) என்பவரின் வீட்டில் தங்குவதற்காக வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சுற்றி வளைத்து பிடித்தனர்

இதையடுத்து நேற்று அதிகாலை சென்னையில் இருந்து குஞ்சாம்பாளையம் வந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் பிரதீப், சஞ்சய், கலை, ஜோதி ஆகிய 4 பேரை அதிரடியாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னைக்கு அழைத்துச்சென்றனர்.

இதனிடையே கொலையாளிகள் 4 பேரை வீட்டில் தங்க வைக்க உதவிய குட்டி என்கிற பழனிசாமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனக்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேவூர் குஞ்சாம்பாளையத்தில் நேற்று அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story