மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மஞ்சப்பை விருதுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மஞ்சப்பை விருது

தமிழக அரசு சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன கவர்கள் ஆகிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேர்வு செய்து விருது வழங்கப்படும்.

பரிசு விவரம்

மாநில அளவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது மற்றும் முதல் பரிசு ரூ.10 லட்சம், 2-வது பரிசு ரூ.5 லட்சம், 3-வது பரிசு ரூ.3 லட்சம் என வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மஞ்சப்பை விருதை வழங்க உள்ளது.

விண்ணப்ப படிவம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இவ்விருதுக்கான விண்ணப்ப படிவங்களை கலெக்டர் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபர் மற்றும் துறை தலைவர் கையொப்பமிட வேண்டும்.

விண்ணப்பத்தின் 2 பிரதிகள் மற்றும் மென்நகல்கள் சி.டி.(பென்டிரைவ்), மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம்(தாலுகா அலுவலகம் பின்புறம்), விழுப்புரம்-605 602 என்ற முகவரிக்கு வருகிற அடுத்த ஆண்டு மே 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story