சுற்றுச்சூழல் விருது பெற விண்ணப்பிக்கலாம்


சுற்றுச்சூழல் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி கவுரவிப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இவ்விருது பெற விண்ணப்பத்துடன் செயலாக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையில் பிரசுர சீட்டுகள், ஊர்வலங்கள் மற்றும் புகைபடங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும், விண்ணப்பங்கள் மற்றும் அதன் இணைப்புகள் நூலால் உறுதியாக தைக்கப்பட்டிருக்க வேண்டும். இணைக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இந்த விருதுக்குரிய விண்ணப்பிக்கும் முறைகள், விதிமுறைகள், விண்ணப்ப படிவங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குனர் வலைதளத்தில் (www.environment.tn.nic.in) இருந்து வருகிற 15-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 6 நகல்களில் இயக்குனர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை (Director, Department of Environment and Climate Change) என்ற பெயரில் ரூ.100-க்கான கேட்பு காசோலையுடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்கள் இயக்குனர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தரைத்தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை- 600 015 என்ற முகவரிக்கு வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் தபால் மூலம் கிடைக்கப்பெற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story