பழமையான விநாயகர் சிலை கண்டெடுப்பு


பழமையான விநாயகர் சிலை கண்டெடுப்பு
x

நரிக்குடி அருகே பழமையான விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே பழமையான விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை

நரிக்குடி அருகே உள்ள எழுவணி கிராமத்தில் பழமையான விநாயகர் சிலை இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் செல்லப்பாண்டியன், தாமரைக்கண்ணன், அருப்புக்கோட்டை ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

முற்கால பாண்டிய மன்னர்கள் வீரத்திலும், பக்தியிலும், கலைகளிலும் சிறந்து விளங்கினார்கள். இதற்கு உதாரணமாக தற்போது அதிக அளவில் கிடைத்துக் கொண்டிருக்கும் முற்கால பாண்டியரின் சிற்பங்களும், கல்வெட்டுகளுமே சாட்சியாகும். ஒவ்வொரு ஊரிலும் முற்கால பாண்டியர்கள் சிவனுக்கும், பெருமாளுக்கும் தனித்தனியே கோவில் அமைத்து சைவத்தையும், வைணவத்தையும் இரு கண்களாக பாவித்து அந்த இரண்டு கோவில்களுக்கும் அதிக அளவில் நிலங்கள் கொடுத்துள்ளனர்.

கம்பீர தோற்றம்

கால ஓட்டத்தில் அதிகமான கோவில்கள் சிதைந்து காணாமல் போய்விட்டன. கோவில்கள் அழிந்தாலும் கோவில்களில் இருந்த சிற்பங்கள் இப்பொழுது அதிக அளவில் வெளிப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக நாம் முற்கால பாண்டியர்களின் கலை பாணியை அறிய முடிகிறது. இங்குள்ள விநாயகர் சிலையானது 3½ அடி உயரத்திலும், 2 அடி அகலத்திலும் காட்சியளிக்கிறது. துதிக்கை இடது புறமாக வளைந்த நிலையில் மோதகத்தை பற்றியவாறு காட்சி தருகிறது.

மொத்தம் 4 கரங்கள் காணப்படுகிறது. வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் பாசமும் காணப்படுகிறது. வலது கீழ்கரத்தில் உடைந்த தந்தம் காணப்படுகிறது இடது கரத்தை ஊரு ஹஸ்தமாக இடது தொடையில் வைத்தவாறு காட்சி தருகிறார். இவர் ராஜ நீலாசனத்தில் அமர்ந்து மிக கம்பீரமாக காட்சி தருகிறார்.

கல்வெட்டு

ராஜ நீலாசனம் என்பது இடது காலை நன்றாக மடக்கியும் வலது காலை செங்குத்து நிலையில் வைத்திருப்பதாகும். இன்றைய காலகட்டத்தில் நமக்கு முற்கால பாண்டியர்களின் கோவில்கள் கிடைக்காவிட்டாலும் அவர்கள் காலத்து சிற்பங்களும், கல்வெட்டுகளும் அதிக அளவில் கிடைத்து வருகின்றன. இவற்றை நாம் பாதுகாத்து இதன் வரலாற்றை நமது அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story