அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் நடைபயணம்


அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் நடைபயணம்
x

தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

சென்னை,

தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் பிரசார நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, கடந்த மே மாதம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த போதும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஆனாலும், தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதானது ஆகும். ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்த திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும்.

தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இந்த திட்டம் குறித்து தர்மபுரி மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் (இன்று) ஒகேனக்கலில் தொடங்கி 3 நாட்களுக்கு பிரசார நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.

பென்னாகரம், இண்டூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, தர்மபுரி, சோலைக்கொட்டாய், கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பொம்மிடியில் நடைபயணத்தை நிறைவு செய்ய இருக்கிறேன்.

இந்த நடைபயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும். அரசு தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story