'நீட்' தேர்வு விலக்கு தொடர்பான மசோதா குறித்த விளக்கம் ஒரு வார காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்-அமைச்சர் ரகுபதி தகவல்


நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா குறித்த விளக்கம் ஒரு வார காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்-அமைச்சர் ரகுபதி தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2023 6:30 PM GMT (Updated: 24 Jan 2023 9:28 AM GMT)

'நீட்' தேர்வு விலக்கு தொடர்பான மசோதா குறித்த விளக்கம் ஒரு வார காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

'நீட்' தேர்வு விலக்கு

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

'நீட்' தேர்வு விலக்கு தொடர்பான மசோதா குறித்து மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து மீண்டும் ஒரு விளக்கம் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. அதனை மக்கள் நல்வாழ்வு துறை பரிசீலித்து அதற்குரிய விளக்கங்களை தயாரித்து தரும். சட்டத்துறையும் உதவியாக இருந்து ஒப்புதலை பெறும். அதன்பிறகு அந்த விளக்கத்தை மக்கள் நல்வாழ்வு துறை மத்திய அரசுக்கு அனுப்பும்.

அந்த விளக்கம் என்ன என்பதை ஒருவாரத்தில் சொல்வதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

அரசு சட்டக்கல்லூரி

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளவர்களை திருந்தி வாழ தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படுமா? என கேட்கிறீர்கள். பக்கத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சமீபத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது புதுக்கோட்டையில் அரசு சட்டக்கல்லூரி உடனடியாக தொடங்க வாய்ப்பு இல்லை.

இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேறு சில மாவட்டங்களில் அரசு சட்டக்கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளிவரும். கவா்னர் ஆர்.என்.ரவி 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருப்பது தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாடு மக்களுடைய உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி. எதிர்ப்பலைகள் உருவாகியதால் தமிழ்நாடு என்ற வார்த்தை எல்லோராலும் பாராட்டப்படுகிறது, சொல்லப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story