லோகோவை வைத்து 82 நிறுவனங்களை அடையாளம் கண்ட 8 வயது சிறுவன்


லோகோவை வைத்து 82 நிறுவனங்களை அடையாளம் கண்ட 8 வயது சிறுவன்
x
தினத்தந்தி 23 Aug 2022 7:30 PM GMT (Updated: 23 Aug 2022 7:31 PM GMT)

3 நிமிடங்களில் 62 காகித விமானங்களை பறக்க விட்டு தந்தையும், லோகோவை வைத்து 82 நிறுவனங்களை அடையாளம் கண்டு சிறுவனும் கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

தர்மபுரி

தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்தவர் பழனிகுமார். இவர், காகித விமானங்களை பறக்க விடுவதிலும், அவருடைய 8 வயது மகன் அஸ்வின் சுதன், லோகோவை வைத்து நிறுவனங்களை அடையாளம் காணுவதிலும் கின்னஸ் சாதனை முயற்சி தர்மபுரி ராஜ் பேட்மிண்டன் அகாடமியில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி மேற்பார்வையாளர்களாக செந்தில் முருகன், சரவணன், மஞ்சுளா, மல்லிகா, சீதா ஆகியோரும், நேர காப்பாளர்களாக உதயகுமார், முனியப்பன் வடிவேல் ஆகியோரும் செயல்பட்டனர். ராஜ் பேட்மிண்டன் அகாடமி உரிமையாளர் ராஜ்குமார் முன்னிலையில் கின்னஸ் சாதனை முயற்சி நடந்தது.அதாவது, பழனிகுமார், 3 நிமிடத்தில் அதிகப்படியான 62 காகித விமானங்களை பறக்க விட்டு சாதனை படைத்தார். மேலும் அவர், ெதாடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக 17 காகித விமானங்களை பறக்க விட்டும் சாதித்தார். மேலும் 25 காகித விமானங்களை ஒரே இலக்கை நோக்கி பறக்க விட்டும் சாதனை படைத்தார். இதுதவிர அவருடைய மகன் அஸ்வின் சுதன், லோகோவை வைத்து 81 நிறுவனங்களின் பெயர்களை அடையாளம் கண்டு சாதனை படைத்தார்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறுகையில், ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், 3 நிமிடங்களில் 25 காகித விமானங்களை மட்டுமே செலுத்தி சாதனை படைத்துள்ளார். அந்த சாதனையை பழனிகுமார் முறியடித்துள்ளார். இதேபோன்று மற்ற சாதனைகளையும் அவர் தாண்டியுள்ளார். ஏற்கனவே அஸ்வின் சுதன், 64 நிறுவனங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார். அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார். இவர்களின் இந்த 4 சாதனைகளின் தரவுகள் கின்னஸ் சாதனை அலுவலகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஒப்புதல் வந்ததும், அதனை இந்திய நாட்டுக்காக சமர்ப்பிப்போம் என்றனர்.


Next Story