மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வரப்பட்ட 500 லிட்டர் சாராயம் பறிமுதல்; 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வரப்பட்ட 500 லிட்டர் சாராயம் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2023 7:15 PM GMT (Updated: 11 May 2023 7:15 PM GMT)

மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வரப்பட்ட 500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் ஆனைமங்கலம் ஊராட்சி வெட்டாற்று பாலம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை நிறுத்த முயன்றனர். இதில் போலீசாரை கண்டதும் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காரைக்கால் திருமலை ராஜன்பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த பாரதிராஜா மகன் ராஜேஷ் (வயது30 ), நாகை புதுத்தெருவை சேர்ந்த முகமது பாபு மகன் முகமது பாரக் (28 ) ஆகியோர் என்பதும், காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் , முகமது பாரக் ஆகிய 2 பேரையும் கைது செய்து, இவர்களிடமிருந்து 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதேபோல் ஆழியூர் பிரிவு சாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நாகை வெளிப்பாளையம் வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த குணசேகரன் மகன் முகேஷ் ( 25) என்பவர் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 200 லிட்டர் சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story