சென்னை மாரத்தான் போட்டியில் 42 கிலோ மீட்டர் ஓடிய 9 வயது சிறுமி அக்‌ஷிதா


சென்னை மாரத்தான் போட்டியில் 42 கிலோ மீட்டர் ஓடிய 9 வயது சிறுமி அக்‌ஷிதா
x

சென்னை மாரத்தான் போட்டியில் 42 கிலோ மீட்டர் ஓடிய 9 வயது சிறுமி அக்‌ஷிதாவை அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

சென்னை

சென்னை,

சென்னை பெசன்ட் நகரில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில், கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி அக்‌ஷிதா 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இதனை கண்ட சக ஓட்டப்பந்தய வீரர்-வீராங்கனைகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

ஆனால், சிறுமி அக்‌ஷிதா 42 கிலோ மீட்டர் தூரத்தை முழுமையாக ஓடி முடித்தார். இதனை பார்த்த சக வீரர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பொதுமக்கள் என அனைவரும் சிறுமி அக்‌ஷிதாவை பாராட்டி வாழ்த்தினர்.

வருங்காலத்தில் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் போன்று வேகமாக ஓடுவதே தனது விருப்பம் என்று சிறுமி அக்‌ஷிதா தெரிவித்தார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை பூர்வீகமாக கொண்ட சிறுமி அக்‌ஷிதா, தனது பெற்றோர் தினகரன்-தேவகனியுடன் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வசித்து வருகிறார். சிறுமிக்கு, பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேஷ் பயிற்சி அளித்து வருகிறார். சிறுமி அக்‌ஷிதா தினமும் காலையில் 15 கிலோ மீட்டர், மாலையில் 20 கிலோ மீட்டர் ஓடுவதாகவும், வாரத்தில் 2 நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் அவளுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாகவும், பிரத்தியேகமாக உணவுகள் வழங்கப்படுவதாகவும் உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேஷ் தெரிவித்தார்.


Next Story