மசாஜ் சென்டரில் விபசாரம்; பெண் உள்பட 3 பேர் கைது


மசாஜ் சென்டரில் விபசாரம்; பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:46 PM GMT)

ஓசூரில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் மசாஜ் சென்டரில் ஹைடெக் விபசாரம் நடத்திய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்பா சென்டரில் விபசாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்பா என்ற பெயரில் புற்றீசல் போல ஏராளமான மசாஜ் சென்டர்கள் உள்ளன. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பேசி மசாஜ் சென்டருக்கு அழைத்து, இளம்பெண்கள் மூலம் மசாஜ் செய்ய வைப்பதும், பின்னர் அவர்களிடம் நைசாக பேசி விபசாரம் நடைபெறுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் போலீசார் சீதாராம்மேட்டில் உள்ள ஒரு ஆயுர்வேத ஸ்பா சென்டரில் திடீரென சோதனை நடத்தினர். அங்கு மசாஜ் சென்டர் என அழைத்து இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது.

3 பேர் கைது

இதையடுத்து அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்த போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டியை சேர்ந்த துளசிராமன் (வயது 30), பெங்களூரு மங்கம்மனபாளையாவை சேர்ந்த ஸ்ரீநாத் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்குள்ள ஒரு ஸ்பா சென்டரில் சோதனை நடத்தினர். அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிந்தது. இதுதொடர்பாக ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த அர்ச்சனா (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

இளம்பெண்களை வைத்து விபசாரம்

ஓசூரில் ஸ்பா சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், ரிலாக்ஸ் மசாஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை வரவழைக்கிறார்கள். பின்னர் அவர்களிடம் இளம்பெண்கள் மூலம் மசாஜ் செய்ய வைத்து அவர்களுடன் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

இது போன்ற ஸ்பா சென்டர்களுக்கு சீல் வைப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஸ்பா சென்டர்களின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story