திருநாவலூர் அருகேமாணவரை அடித்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கைபோலீசில் தந்தை புகார்
திருநாவலூர் அருகே மாணவரை அடித்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமையா (வயது 34). அதேஊரில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவருடைய மகன் தர்ஷன் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே மடப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். சம்பவத்தன்று மாலை ராமமையா தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்றார். அப்போது தர்ஷன் அழுது கொண்டே வந்து பள்ளி ஆசிரியர் தன்னை அடித்து விட்டதாக தந்தையிடம் கூறினான். மேலும் தர்ஷனின் தலையில் வீக்கம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமையா இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ராமையார் தனது மகனை தாக்கிய பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே காயமடைந்த மாணவன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.