தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பேச்சு-கட்டுரை போட்டிகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை


தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பேச்சு-கட்டுரை போட்டிகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
x

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பேச்சு-கட்டுரை போட்டிகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.

அரியலூர்

தமிழ்நாடு நாள் விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு தமிழ் வளர்ச்சி துறையின் அரியலூர் மாவட்ட உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் 31 பேரும், கட்டுரை போட்டியில் 29 பேரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு போட்டிகளை அரியலூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நடத்தினார். நடுவர்களாக முதுகலை தமிழ் ஆசிரியர்கள் செயல்பட்டனர். பேச்சு போட்டியில் முதலிடத்தை செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் சுஜீதாவும், 2-ம் இடத்தை கங்கை கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் இப்ராஹிமும், 3-ம் இடத்தை பெரியாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் சுகுணாவும் பிடித்தனர். கட்டுரை போட்டியில் முதலிடத்தை கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் அர்ச்சனாவும், கல்லாத்தூர்-தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் குணசுந்தரியும், 3-ம் இடத்தை மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் ஜெயதிரிஷாவும் பிடித்தனர். இவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும் மாவட்ட கலெக்டரால் விரைவில் வழங்கப்படவுள்ளது என்று தமிழ் வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர். பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story