ஏற்காடு மலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது விபத்து - தந்தை,மகள் பலி


ஏற்காடு மலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது விபத்து - தந்தை,மகள் பலி
x

ஏற்காடு மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் தந்தை,மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏற்காடு,

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 67). இவரது மகள் லோகேஸ்வரி (24). இவருக்கும் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த கோகுல்நாத் என்பவருக்கும் கடந்த 3ந் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் இளங்கோவன் தனது மகளை பார்ப்பதற்காக சேலம் வந்துள்ளார்.

அப்போது தந்தை, மகள் இருவரும் சேர்ந்து ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்துள்ளனர். ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சேலம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஏற்காடு மலை பாதையில் 5வது கொண்டை ஊசி அருகில் சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் 5வது வளைவில் இருந்து 4வது வளைவில் விழுந்ததில் லோகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த இளங்கோவனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு சென்ற சில நிமிடங்களில் இளங்கோவனும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story