பர்கூர் மலைப்பாதையில் லாரியில் இருந்து கிரானைட் கற்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு; டிரைவர் உயிர் தப்பினார்


பர்கூர் மலைப்பாதையில் லாரியில் இருந்து கிரானைட் கற்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு; டிரைவர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 11 Jun 2023 9:38 PM GMT (Updated: 12 Jun 2023 7:05 AM GMT)

பர்கூர் மலைப்பாதையில் லாரியில் இருந்து கிரானைட் கற்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

ஈரோடு

அந்தியூர்

பர்கூர் மலைப்பாதையில் லாரியில் இருந்து கிரானைட் கற்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

சரிந்து விழுந்தன

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி பெஜிலட்டியில் இருந்து லாரி ஒன்று கிரானைட் கற்கள் ஏற்றிக்கொண்டு அந்தியூர், தாமரைகரை வழியாக ஈரோட்டுக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. பர்கூர் மலைப்பாதையின் மேல் ஸ்லோப் என்ற இடத்தில் காலை 7 மணி அளவில் சென்றபோது லாரியில் இருந்து ராட்சத கிரானைட் கற்கள் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதைத்தொடர்ந்து எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு கிரானைட் கற்களை அகற்றும் பணி நடந்தது. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் அவ்வளவாக வாகன போக்குவரத்து இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கிராம மக்கள்

பர்கூர் மலைப்பாதையில் மிகவும் குறைவான இடைவெளியில் லாரி, பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலும் ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் வாகனங்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே பாதுகாப்பு கருதி மலைப்பாதையில் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பெரிய கற்களை ஏற்றுக் கொண்டு வரும்போது கீழே விழாமல் இருப்பதற்காக பெரிய சங்கிலியால் கட்டிக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Next Story