தவிக்க வைக்கும் தங்கம்... பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?


தவிக்க வைக்கும் தங்கம்... பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?
x

அனைவரின் வாழ்க்கையிலும் சரி, அரசாங்கங்களின் இயக்கங்களிலும் சரி, தங்கம் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது. ஏழை, எளியவர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்கத்தின் மீது தாளாத மோகம் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப துக்ககாரியங்கள் நடப்பது இல்லை.

அதே நேரத்தில் சாமானியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என எல்லோராலும் தங்கம் ஒரு லாபகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற இதரச் சொத்துகள் வீழ்ச்சி அடையக்கூடும். ஆனால் தங்கம் எப்போதும் முன்னணியிலேயே நிற்கும். நிதி நெருக்கடியா? தங்கத்தை அடகுவைத்து அல்லது விற்று உடனடியாக பணமாக்கிகொள்ள முடியும்.

விலை நிர்ணயம்

இந்தியாவுக்கு துபாய், லண்டன் போன்ற இடங்களில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் மும்பைதான் தங்க 'நெட்வொர்க்' மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்தே இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தங்கம் 'சப்ளை' செய்யப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது, 'லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேசன்'தான். ஒவ்வொரு நாளும் (விடுமுறை நாட்களை தவிர) காலை 10.30 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் அமெரிக்க டாலர்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை மையமாக வைத்தும், இன்சூரன்ஸ், இறக்குமதி வரி, போக்குவரத்து செலவு ஆகியவற்றையும் சேர்த்தும் அனைத்து நாடுகளிலும் விலை நிர்ணயம் ஆகிறது.

இந்தியாவில் மும்பையில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகச்சந்தையில் எப்படி காலை, மாலையில் விலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் இங்கும் விலை தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறாக விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கத்தின் விலை ஆண்டுக்காண்டு மேல்நோக்கியே பயணிக்கிறது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை


1920-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21-க்கு விற்பனை ஆன நிலையில், 2001-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 368 ஆகவும், 2011-ம் ஆண்டில் ரூ.22 ஆயிரத்து 104 ஆகவும் உயர்ந்துகொண்டே வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத விலை உயர்வாக இது இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் விலை சற்று குறையத் தொடங்கி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது.

இப்படியாக தொடர்ந்து தங்கம் விலை ரூ.36 ஆயிரத்திற்கும் ரூ.40 ஆயிரத்திற்கும் இடையில் இருந்துவந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கிய நேரத்தில், முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டினர். இதனால் அதன் விலையும் சற்று சரிந்து காணப்பட்டது. அதையடுத்து மீண்டும் தங்கத்தின் விலை பெருமளவில் ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஒரு பவுன் ரூ.40 ஆயிரம்

கடந்த மார்ச் மாதம் 7, 8, 9-ந் தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 14, 15, 16, 17, 18, 19-ந் தேதிகளிலும் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டுவந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

கடந்த 2-ந் தேதியன்று மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் தங்கம் விலை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பாதிப்பை ஏற்படுத்தாது



தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு முதன்மை ஆலோசகர் சையது அகமது கூறும்போது, 'கொரோனா காலத்தில் எவ்வளவோ தொழில்கள் அடிபட்டன, சில தொழில்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் தங்க வியாபாரம் மட்டும் தலைநிமிர்ந்துதான் இருக்கிறது. இதற்கு மக்கள் தங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் முக்கிய காரணம். ஒரு கிராம் தங்கம் ரூ.500 ஆக இருந்தபோதும் சரி, இப்போது ரூ.5 ஆயிரமாக இருக்கும்போதும் சரி, நகைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது. எனவே இந்த விலை உயர்வு மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தங்கத்துக்கான மவுசு எப்போதும் குறையாது' என்றார்.




சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்திருந்த திலகவதி என்ற பெண் கூறுகையில், 'சிங்கப்பூரில் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 620-க்கு கிடைக்கிறது. அங்கு தங்கம் சுத்தமாக இருக்கும். எங்களுடைய தேவைக்கு நான் அங்கிருந்துதான் தங்கத்தை வாங்கி வருவேன். தற்போதுள்ள சூழலில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருவது சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதே நிலை நீடித்தால், சாதாரண மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்துவிடும். இப்போதே பெண்கள் தங்கத்தைவிட கவரிங் நகைகள் மீதுதான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே சென்றால், தங்கம் என்பது வெறும் சேமிப்பு பொருளாக பார்க்கப்படும். அணிவதற்கான நகையாக கவரிங்கை தேர்வுசெய்யும் நிலை ஏற்படும்' என்றார்.

முடியாத நிலை



பெரம்பூரைச் சேர்ந்த சார்லஸ் கூறும்போது, 'தங்க நகை இல்லாத வீடுகள் இருக்காது. வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவியோ, பிள்ளைகளோ நகை மீது ஆசைப்பட்டு வாங்கி கொடுங்கள் என்று கேட்டால், என்றாவது ஒருநாள் பணம் இருக்கும்போது வாங்கி கொடுக்கத்தான் செய்கிறோம். ஆனால் இப்படி விலை உயர்ந்து கொண்டே செல்வதை பார்க்கும்போது, வீட்டு பெண்கள் கேட்டால்கூட வாங்கி கொடுக்கமுடியாத நிலை வந்துவிடும் போல் இருக்கிறது' என்றார்.



சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த கார்குழலி கூறுகையில், 'தங்கம் என்பது ஆடம்பரப்பொருள் என்ற நிலை மாறி, இப்போது ஒவ்வொரு குடும்பத்திலும் அத்தியாவசியப்பொருளாக ஆகிவிட்டது. நம்முடைய தமிழ் கலாசாரத்தில் பெண்குழந்தைகளுக்கு நகைகளை போட்டு அலங்கரிப்பதும், திருமணத்தின்போது பெண்ணுக்கு நகைகள் போட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவதும் வழக்கமாக உள்ளது. மேலும் தங்கம் சிறந்த முதலீடு என்பதுடன், அவசரத்துக்கு கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாகவும் விளங்குகிறது. விவசாய குடும்பம் என்றாலும், வியாபார குடும்பம் என்றாலும், திடீரென உடனடியாக பணம் வேண்டுமென்றால் தங்க நகைதான் கைகொடுக்கிறது. விலை அதிகமாக இருந்தால், தங்கத்தின் அளவை கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாமே தவிர, வாங்காமல் ஒருபோதும் இருக்கமுடியாது' என்றார்.

மோகம் குறைந்துவிடும்




புதுப்பேட்டையைச் சேர்ந்த ஷீலா ஜோசப் என்ற பெண் கூறும்போது, 'தங்கம் விலை உயர்ந்துகொண்டே சென்றால், பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் எங்களைப் போன்றோருக்கு மிகவும் கஷ்டம்தான். கல்யாண நிகழ்வுகளுக்காக காத்திருப்பவர்கள் இந்த விலை உயர்வை தாங்கமாட்டார்கள். தங்கம் மட்டுமல்ல, அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. தங்கம் விலை உயர்வு ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்வதைவிட, அதன் மீதான மோகத்தை குறைத்துவிடும் என்றே சொல்லலாம்' என்றார்.

இதையும் அறிந்துகொள்ளலாமே?

* 'கேரட்' என்பது தங்கத்தின் தூய்மையை குறிப்பது ஆகும். இதில் எந்தெந்த கேரட்டில் எவ்வளவு சதவீதம் தங்கம் இருக்கும் என்ற விவரத்தை பார்க்கலாம்: 24 கேரட்- 99.9 சதவீதம், 23 கேரட்- 95.6 சதவீதம், 22 கேரட்- 91.6 சதவீதம், 21 கேரட்- 87.5 சதவீதம், 18 கேரட்- 75 சதவீதம், 17 கேரட்- 70.8 சதவீதம், 14 கேரட்- 58.5 சதவீதம், 10 கேரட்- 41.7 சதவீதம், 9 கேரட்- 37.5 சதவீதம், 8 கேரட்- 33.3 சதவீதம்.

* தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

* சர்வதேச அளவில் வீடுகளில் அதிகம் தங்கம் வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்குத்தான் முதலிடம். அதேபோல அரசாங்கத்தின் சார்பில் அதிக தங்கம் இருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.


Next Story