திருச்சுழி குண்டாற்றில் ஆடி தபசு திருவிழா


திருச்சுழி குண்டாற்றில் நடைபெற்ற ஆடி தபசு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி குண்டாற்றில் நடைபெற்ற ஆடி தபசு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தபசு நிகழ்ச்சி

திருச்சுழியில் உள்ள துணைமாலையம்மன், திருமேனிநாதசுவாமி கோவிலில் ஆடி தபசு திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

10-ம் நாள் தபசு நிகழ்ச்சியானது திருச்சுழி குண்டாற்றில் நடைபெற்றது. துணைமாலை அம்மன் கோபமுற்று தபசு மண்டபத்தில் தவம் மேற்கொண்டதாகவும், திருமேனிநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்து அம்மனை சாந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் திருமேனிநாதருக்கும், துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி திருச்சுழி குண்டாற்றில் நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம்

அப்போது அம்மன், சுவாமியை 3 முறை வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த திருவிழாவில் திருச்சுழி, அருப்புக்கோட்டை, நரிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story