பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்


பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்
x
தினத்தந்தி 12 Aug 2023 8:45 PM GMT (Updated: 12 Aug 2023 8:45 PM GMT)

பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி. டாஸ்மாக் ஊழியர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் பணிக்கு சென்று விட்டார். தொடர்ந்து இரவில் பெண் ஒருவர் ரவியின் வீட்டுக்கு வந்து, அவரது மகளிடம் தனது மூத்த குழந்தை பந்தலூர் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து விட்டது. எனவே, இந்த பச்சிளம் குழந்தையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கூறினார். பின்னர் அந்த பெண் ரவி மகளிடம் குழந்தையை கொடுத்து விட்டு சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து தேவாலா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பிறந்து 7 ஆட்களே ஆன ஆண் பச்சிளம் குழந்தையை விட்டு, விட்டு பெண் சென்றது தெரியவந்தது. அந்த பெண் யார் என்பது தெரியவில்லை. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை ஒப்படைத்தனர். பெண் தவிக்க விட்டு சென்ற குழந்தை யாருடையது?, கடத்தி கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story