நாகர்கோவிலில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து


நாகர்கோவிலில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து
x

நாகர்கோவிலில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள அறை ஒன்றில் பஸ்சின் பழைய சீட்டுகள் மற்றும் பொருட்கள் போடப்பட்டு இருந்தது. இந்த அறையில் இன்று மதியம் 12.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்தன. தீ மளமளவென்று பரவியதையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் பயங்கர சத்தத்துடன் பொருட்கள் வெடித்து சிதறின.

இதை பார்த்த போக்குவரத்து கழக ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 வண்டிகளில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பழைய பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அண்ணா பஸ் நிலையம் மற்றும் மீனாட்சிபுரம் சாலையில் கடுமையான புகை மண்டலங்கள் ஏற்பட்டது. பொதுமக்களும் அங்கு திரண்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தீவிபத்தில் டெப்போவை ஒட்டி உள்ள ஓட்டல் ஒன்றின் ஒருபுறமும் எரிந்து சேதம் அடைந்தது. அந்த ஓட்டலின் கண்ணாடிகள் மற்றும் பைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக கோட்டார் போலீசில் போக்குவரத்து கழக அதிகாரிகள் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் டெப்போவில் தீவிபத்து ஏற்பட்டதா? ஓட்டலில் ஏற்பட்டதா? தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story