தியாகதுருகம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி வியாபாரி கைது


தியாகதுருகம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி வியாபாரி கைது
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:47 PM GMT)

தியாகதுருகம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடிசெய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே குன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மனைவி ராஜலட்சுமி(வயது 45). இவர் தியாகதுருகம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தியாகதுருகம் குன்னியூர் பகுதியை சேர்ந்த தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து வரும் முருகன் (39) என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவர் என்னிடம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். ஏலச்சீட்டுக்கு செலுத்திய பணத்தையும் கடன் கொடுத்த பணத்தையும் அவர் திருப்பி தரவில்லை.

என்னை போன்று அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் கண்ணன், ராணி, ரஞ்சித்குமார், சதீஷ்குமார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு கட்டிய வகையிலும், கடனாகவும் பணம் பெற்றுள்ளார். இதுவரை சுமார் ரூ.40 லட்சம் வரை பணம் வாங்கியதாக தெரிகிறது.

கைது

ஆனால் நாங்கள் கொடுத்த பணத்தை முருகன் திருப்பி தரவில்லை. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ரூ.40 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story