தவிட்டுப்பாளையம் பகுதியில் ரூ.20 கோடியில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கப்படும்: அமைச்சர் தகவல்


தவிட்டுப்பாளையம் பகுதியில் ரூ.20 கோடியில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கப்படும்: அமைச்சர் தகவல்
x

தவிட்டுப்பாளையம் பகுதியில் ரூ.20 கோடியில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கப்படும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர்

நிவாரணம்

கரூர் மாவட்டம், தவிட்டுபாளையம், நஞ்சை புகழூர் காவிரி ஆற்று கரையோர பகுதிகளில் குடியிருக்கும் வீடுகளில் வெள்ளநீர் புகுந்து பாதிக்கப்பட்ட இடங்களை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சமுதாயக்கூடம் மற்றும் ஊராட்சி சேவை மைய கட்டிட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 120 குடும்பங்களை சேர்ந்த 323 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பேட்டி

பின்னர், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

தவிட்டுப்பாளையம் மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையான காவிரி வெள்ளநீர் ஊருக்குள் புகாத வகையில் புகழூர் காவிரி ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனை முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று 3 மாத காலத்திற்குள் ரூ.20 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் கரையோரம் தடுப்புச் சுவர் அமைக்கப்பட உள்ளது. அதற்கான நிதிகள் ஒதுக்கீடு, திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஆதாரங்கள் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

சீரான மின்சாரம்

மழை அதிக அளவு பெய்யும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் உயர் அதிகாரிகள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.நீலகிரி பகுதியில் மரங்கள் சாய்ந்த பகுதிகளில் 12 இடங்களில் 5000 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் மாயனூர் கதவணை, திம்மாசிபுரம், அரங்கநாதன் பேட்டை பகுதிகளில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு கூட்டம்

பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான குடிநீர் வினியோகம் வழங்குவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


Next Story