வழிகேட்பது போல் நடித்து விவசாயிடம் செல்போன் பறிப்பு


வழிகேட்பது போல் நடித்து விவசாயிடம் செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2023 7:30 PM GMT (Updated: 14 Feb 2023 7:30 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:-

மோகனூர் அருகே வழிகேட்பது போல் நடித்து விவசாயிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விவசாயி

மோகனூர் அருகே நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 44), விவசாயி. இவர், நேற்றுமுன்தினம் மாலை தன்னுடைய மனைவி அம்சவேணியுடன் நாமக்கல் சென்று விட்டு வளையபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் மெயின் ரோட்டில் என்.அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் வந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர், மணிவேலை கையை காட்டி நிறுத்தினார்.

செல்போன் பறிப்பு

பின்பு ஓசூர் செல்லும் வழி எது என்று கேட்டார். அவருக்கு மணிவேல் வழி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர், மணிவேலின் சட்டைப்பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

இதை சற்றும் எதிர்பாராத மணிவேல் அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிள்களில் துரத்தி சென்று அந்த நபரை பிடித்து மோகனூர் போலீசில் ஒபப்டைத்தனர்.

கைது

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர், திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு செக்போஸ்ட் அருகே உள்ள ஜெ.ஜே. நகர் குடிசை மாற்று வாரியத்தில் வசிக்கும் கணேசன் மகன் ஜீவா (வயது 21) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும், மணிவேலின் செல்போனையும் போலீசார் மீட்டனர். கைதான ஜீவா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story