கால்வாயில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி சமையல் தொழிலாளி பலி


கால்வாயில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி சமையல் தொழிலாளி பலி
x

தோவாளை அருகே கால்வாயில் குளிக்க சென்ற இடத்தில் நீரில் மூழ்கி சமையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரல்வாய்மொழி,

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி படுக்கபத்து கீழத்தெருவை சேர்ந்தவர் சித்திரைபாண்டி (வயது 52) இவர் சமையல்காரர். அதே பகுதியை சேர்ந்தவர் இசக்கி (37) இவர் சொந்தமாக லாரிகள் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது லாரிகள் வேலை காரணமாக சீதப்பால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அந்த லாரிகளை பார்ப்பதற்காக இசக்கி, சித்திரைபாண்டி மற்றும் வீரபாண்டியன் ஆகிய மூவர் சென்றுள்ளனர். லாரிகளை பாத்து விட்டு திரும்பிய போது தோவாளை கால்வாயில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு கால்வாயில் சித்திரை பாண்டி குளிக்க இறங்கியுள்ளார். அப்போது நீர் அதிகமாக வந்ததால் அவர் நீரில் மூழ்கி இழுத்துச் செல்லப்பட்டார்.

இதை பார்த்த மற்ற இருவரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் சித்திரை பாண்டி அதற்குள் நீரில் மூழ்கி மாயமானார். உடனே இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வந்து அவரை தேடினர். ஆனால் இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு காலையில் அங்கு வந்த சித்திரைபாண்டியின் உறவினர்கள் நீரில் இறங்கி அவரை தேடினர். அங்கு அவர் நீருக்கு அடியில் செடியில் சிக்கிக்கொண்டு உயிரிழந்த நிலையில் இருந்தார். அவரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் அவரின் உடைல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story