அரியலூரில் 79.28 சதவீதம் வாக்குப்பதிவு: உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது


அரியலூரில் 79.28 சதவீதம் வாக்குப்பதிவு: உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது
x

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 79.28 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது.

அரியலூர்

இடைத்தேர்தல்

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த அரியலூர் ஒன்றியம், ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆண்டிமடம் ஒன்றியம், இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதையடுத்து, இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 11 வாக்குச்சாவடிகளில் நடந்தது. இதில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 4,831 வாக்காளர்களில், 1,858 ஆண் வாக்காளர்களும், 1,972 பெண் வாக்காளர்களும் என 3,830 பேர் வாக்களித்தனர். இது 79.28 சதவீதம் ஆகும்.

வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது

அரியலூர் மாவட்டங்களில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது.

ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு தலா 3 பேர் என அரியலூர் மாவட்டத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 12 அரசு அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். அரியலூர் மாவட்டத்தில் ரெட்டிபாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகள் 6 சுற்றுகளாகவும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு பதிவான வாக்குகள் ஒரு சுற்றாகவும் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு சில மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும் என்று அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story