75-வது சுதந்திர தினவிழா: வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள் - எல்.முருகன்


75-வது சுதந்திர தினவிழா: வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள் - எல்.முருகன்
x

13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள் என பொதுமக்களுக்கு எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை தனியார் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில், தென்னிந்திய ஆய்வுக் கல்வி மையம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'ஓலம்' காணொலியை மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று வெளியிட்டார். இதனை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பெற்றுக்கொண்டார்.

விழாவில், எல்.முருகன் பேசியதாவது,

வளமான பாரதத்தை சூழ்ச்சியின் காரணமாக வீழ்த்தி மீண்டும் எழுச்சி கண்ட கதையை இந்த காணொலி விளக்குகிறது. இந்த உலகத்திற்கு ஒரு தலை சிறந்த நாடக இந்தியா உள்ளது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ.சி. அவரின் தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிகொண்டு இருக்கிறார்.

75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். இது ஆங்கிலேயர்களின் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story