விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.750 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு


விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.750 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு
x
தினத்தந்தி 17 Sep 2022 6:45 PM GMT (Updated: 17 Sep 2022 6:45 PM GMT)

தமிழ்நாடு வாழ்வியல் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.750 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மோகன் தெரிவித்தார்

விழுப்புரம்

திண்டிவனம்


ரூ.750 கோடி வங்கி கடன்

திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவில் வங்கியாளர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவும் நிலையான வருவாயை உருவாக்கி கொள்ளவும் தமிழ்நாடு வாழ்வியல் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் ரூ.80 கோடி கடன் வழங்கப்பட உள்ளது.

தகுதியான நபர்களுக்கு

தங்கள் வங்கிகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுய தொழில் புரிபவர்கள், சிறிய தொழில் நிறுவனம் வைத்திருப்பவர்கள் மற்றும் தாட்கோ மூலம் கடன் உதவி கோருபவர்கள் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்தால் அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து தகுதியான நபர்களுக்கு எந்த ஒரு நிபந்தனையும் இன்றி கடன் வழங்க வேண்டும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்கள் அரசின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே நிதியினை சரியான முறையில் தகுதியான நபர்களுக்கு காலம் தாழ்த்தாமல் கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் காஞ்சனா, தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, மாவட்ட தொழில் மைய மேலாளர் தாமோதரன், ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story