ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - தென்காசி கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - தென்காசி கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜ், முருகன், அருள் பெருமாள், ராஜ் என்ற செல்வராஜ், சுரேஷ், ராஜசேகரன், வைத்திலிங்கம்.

தென்காசி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருந்ததியார் தெருவை சேர்ந்த சேர்ந்த வேலு மகன் கருப்பசாமி (வயது 33). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிட தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற செல்வராஜ்(49), சுரேஷ்(46), முத்துராஜ்(35), ராஜ சேகரன்(37), அருள் பெருமாள்(34), முருகன்(42), ராஜ்(33), வைத்திலிங்கம்(35), பிரபு(27) ஆகிய 9 பேருக்கும் தொழில் ரீதியாக பழக்கம் இருந்து வந்தது.

இவர்கள் 9 பேரும் ஆற்று மணல் எடுத்து விற்பனை செய்து வந்தவர்கள். இந்த நிலையில் தொழில் காரணமாக இவர்களுக்கும் கருப்பசாமிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சுரேஷின் மணல் லாரியை போலீசார் விசாரித்தனர்.

இதற்கு கருப்பசாமி தான் காரணம் என்று நினைத்த 9 பேரும் கடந்த 12-09-2012 அன்று ஆலங்குளத்தில் இருந்து புதுப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் கருப்பசாமி சென்று கொண்டிருந்தபோது அவரை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுராதா இன்று மதியம் அதிரடியான தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் மேற்கூறிய 9 பேரில் ஒருவர்க்கு சம்பவம் நடைபெறும் போது 17 வயது என்பதால் அவர் மீது சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாலும், முத்துராஜ் என்பவர் இறந்து விட்டதாலும் மீதி உள்ள 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த தீர்ப்பில் 7 பேரும் தலா ரூ.3,000 அபராதம் கட்ட வேண்டும் என்றும் இதனை செலுத்த தவறினால் மேலும் 2 வருடங்கள், ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலுச்சாமி ஆஜரானார்.


Next Story