நீலகிரி மாவட்டத்தில் நீட் தேர்வை 691 மாணவ மாணவிகள் எழுதினர்


நீலகிரி மாவட்டத்தில் நீட் தேர்வை 691 மாணவ மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 7 May 2023 6:45 PM GMT (Updated: 7 May 2023 6:45 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் நீட் தேர்வை 691 மாணவ மாணவிகள் எழுதினர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நடந்த நீட் தேர்வை 691 மாணவ -மாணவிகள் எழுதினர்.

நீட் தேர்வு

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

மேலும் ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2023-24-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நடந்தது. இதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஒரே மையம் என்பதால் கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்றோர் மாணவ- மாணவிகளை அழைத்து வந்திருந்தனர்.

691 மாணவ-மாணவிகள் எழுதினர்

தேர்வர்கள் காலை 11 மணியில் இருந்து தேர்வு எழுதும் மையத்துக்குள் ஒவ்வொரு நபராக சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாணவ- மாணவிகள் பயோ மெட்ரிக் எடுத்து, புகைப்படம் எடுக்கப்பட்டது. மேலும் நுழைவு சீட்டில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இதை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் தேர்வு எழுத வந்த போது கெடுபிடிகள் குறித்து மாணவ- மாணவிகள் பலருக்கும் தெரிந்து விட்டதால், அதற்கு ஏற்ப தயாராக வந்திருந்ததால் பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதினர்.

நீலகிரி மாவட்டத்தில் 203 மாணவர்கள், 508 மாணவிகள் என 711 பேர் தேர்வு எழுத நுழைவு சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில் 691 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 20 மாணவ-மாணவிகள் வரவில்லை.

நீட் தேர்வையொட்டி ஊட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story